முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (30) அதிகாலை 2 மணி அளவில் திருடுவதற்காக இவர்கள் வருகை தந்து வீடு ஒன்றினை உடைக்க முற்பட்டபோது அந்த வீட்டுக்காரர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் மூன்று பேர் பிடிக்கப்பட்டு நையப்புடைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் தொடர்ச்சியாக தேடுதலை மேற்கொண்டு மாலை வேளை ஒருவரை பிடித்து அவரையும் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக தேடி வந்த இளைஞர்கள் இரவு ஐந்தாவது நபரையும் பிடித்துள்ளனர். இவரை நையப்புடைத்த வேளை இவர்களது திருட்டுக்கு உடந்தையான புதுக்குடியிருப்பு நபரை அடையாளம் காட்டியுள்ளார்.
இறுதியாக பிடிக்கப்பட்ட நபரை புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கூடாக அழைத்து, வந்து இனி திருட வருபவர்களுக்கு இதுதான் தண்டனை என காண்பித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதன் பின்னர் இவர்களது திருட்டுக்கு உடந்தையான புதுக்குடியிருப்பு நபரை பிடித்த இளைஞர்கள் அவரையும் நையப்புடைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்த இடம்பெறும் திருட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இனிவரும் காலங்களில் மக்கள் இவ்வாறான தண்டனைகளையே வழங்குவார்கள் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்படும் போது உறவுகளை வளர்த்து அணிகளாகி திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறான இளைஞர் மற்றும் மக்கள் பொலிஸ் குழு உறுப்பினர்கள் ஊடாக திருட்டு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment