வியட்நாமில் உள்ள முகாமில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை அகதிகளில் ஒருவர் இறந்துள்ளார்.
இலங்கைக்கு மீள அனுப்பும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தன்னால் மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப முடியாது என்று கூறி அந்த அகதி உயிரை மாய்த்துக் கொண்டதாக வியட்நாம் முகாமிலுள்ள மற்றொரு அகதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அந்த முகாமில் கடந்த 18ஆம் தேதி இரண்டு இலங்கை அகதிகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அந்த இருவரும் சம்பவம் நடந்த உடனேயே வியட்நாமிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என தெரிய வந்துள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு 13 வயது. கடைசி சிசுவிற்கு 4 மாதங்கள் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சுந்தரலிங்கம் கிரிதரனின் உறவினர் இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கிரிதரன் உயிரிழந்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று காலை 9.30 அளவில் அறிவித்தது.
இரண்டு நாட்களாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, அவர் தற்கொலை செய்து முயற்சித்த விவரத்தை தெரிவித்தனர்.
அவருடைய ஆவணங்களை தருமாறு கேட்டனர். நாங்கள் கொடுத்தோம். அடையாள அட்டை பிரதி உள்ளிட்ட ஆவணங்களை வாங்கினார்கள்.
கிரிதரனின் மனைவி தனக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு தமது கணவரின் நிலை குறித்து கேட்டார்.
அப்போது தொலைபேசி அழைப்பு தெளிவில்லை எனக்கூறி மறுமுனையில் இருந்த அதிகாரிகள் இணைப்பைத் துண்டித்து விட்டனர்.
இன்று காலை மீண்டும் அதிகாரிகள் தொலைபேசி ஊடாக அழைத்தார்கள். உங்களின் கணவர் இறந்து விட்டார் என சொன்னார்கள். ஆனால், என்ன நடந்தது என்று கூறவில்லை" என தெரிவித்தார்.
இதற்கிடையே, வியட்நாமில் உயிரிழந்த கிரிதரனின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு, இலங்கை ரூபாவில் சுமார் 28 லட்சம் ரூபா கோரியதாக அவர் கூறுகின்றார்.
கிரிதரனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த உறவினர் குறிப்பிட்டார்.
வியட்நாம் முகாமிலுள்ள 303 இலங்கை அகதிகள்
வியட்நாமிலுள்ள மூன்று முகாம்களில் 303 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையை எதிர்நோக்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலான தமிழர்கள் மியன்மார் வழியாக கனடா நோக்கி செல்ல முயற்சிக்கிறார்கள்.
இலங்கையிலிருந்து உரிய விசா நடைமுறைகளை பின்பற்றி, விமானத்தின் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் மியன்மார் நோக்கி சென்றனர்.
சில மாதங்களாக மியன்மாரில் தங்கியிருந்த இந்த அகதிகள், அங்கிருந்து கப்பல் மூலம் கனடா நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர்.
எனினும், அந்த கப்பல் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை அண்மித்த கடல் பரப்பில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியதாக, கடந்த 6ஆம் தேதி இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு தகவலொன்று கிடைத்திருந்தது.
இந்த தகவலை, இலங்கை கடற்படை சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பகிர்ந்த நிலையில், சிங்கப்பூர் கடற்படைக்கு குறித்த கப்பல் தொடர்பில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அருகாமையில் பயணித்த ஜப்பான் சரக்கு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டு, வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
தாயகம் திரும்ப மறுக்கும் அகதிகள்
வியட்நாம் முகாமில் உள்ள அகதிகளில் பலர், தாம் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை எனவும், அவ்வாறு அதற்கு முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் வியட்நாமிய அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்கள்.
எனினும், குறித்த அகதிகளை மீள இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே, இரண்டு அகதிகள் கடந்த 18ம் தேதி தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment