பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை ஏன் ? - கேள்வி எழுப்பியுள்ள சிவசக்தி ஆனந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 26, 2022

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை ஏன் ? - கேள்வி எழுப்பியுள்ள சிவசக்தி ஆனந்தன்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் பர்கிக்கு வடக்கு தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை வருவதற்கு காரணம் என்ன என்று மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் வடக்கிற்கான பயணமொன்றை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் பர்கி மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு புலமைப்பரிசில் திட்டங்களுக்கான அழைப்பினை விடுத்ததோடு, தமிழ் மக்கள் மீதும் தமக்கு கரிசனைகள் இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையில் வடக்கிற்கான இவரது மூன்று நாட்கள் திடீர் பயணம் பல்வேறு திரைமறைவு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம் என்ற கரிசனைகள் எமக்குள்ளன.

குறிப்பாக, வடக்கை மையப்படுத்தி இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முனைகின்றாரா என்ற சந்தேகங்களும் உள்ளன.

அதேநேரம், வடக்கு தமிழ் மக்கள் மீது கரிசனைகளைக் கொண்டவராக தன்னைக் காண்பிக்க விளைந்துள்ளார். அவ்வாறு தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்பவராக இருப்பாராயின் நீதிக்காக போராடும் அந்த மக்களுக்காக ஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வாக்களிப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

அதற்கும் முன்னதாக தமிழ் மக்கள் இன்று நீதிக்காக போராடுவதற்கு காரணமாக இருக்கும் இலங்கை இராணுவத்திற்கு போரியல் ஆயுதங்களை அள்ளி வழங்கி கண்மூடித்தனமான அப்பட்டமான மனித உரிமைகளை மீறிய போருக்கு காரணமாக இருந்திருக்கக் கூடாது.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததன் பின்னர் வடக்கு மக்கள் மீது கரிசனை கொள்வதென்பது வேடிக்கையான விடயமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment