(நா.தனுஜா)
சில அரச சார்பற்ற நிறுவனங்களும், சர்வதேச அமைப்புக்களும், குழப்பம் விளைவிக்க முற்படும் தரப்புக்களும் தம்மைச் சார்ந்த நபர்கள் சுயாதீன ஆணைக்குழுக்களில் அங்கம் வகிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் எந்தவொரு தரப்பினருக்கும் தேவையான நபர்களை ஆணைக்குழுக்களுக்கு நியமிக்க முடியாது. மாறாக நாட்டுக்குத் தேவையான நபர்களையே நியமிக்க முடியும் என்று தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இத்திருத்தத்தின் பிரகாரம் இடம்பெறக் கூடிய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், 'சில அரச சார்பற்ற நிறுவனங்களும், சர்வதேச அமைப்புக்களும், சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாட்டில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் தரப்புக்களும் தம்மைச் சார்ந்த பிரதிநிதிகள் அக்குழுக்களில் அங்கம் வகிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இங்கு (சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு) எந்தவொரு தரப்பினருக்கும் தேவையான நபர்களை நியமிக்க முடியாது என்றும், மாறாக நாட்டுக்குத் தேவையான நபர்களையே நியமிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின்படி சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பெயர் பரிந்துரை நியாயமான முறையில் முன்னெடுக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment