நாம் வகிக்கும் பதவிகளை அர்ப்பணிக்கவும் தயார் : மீண்டும் இணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கின்றோம் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

நாம் வகிக்கும் பதவிகளை அர்ப்பணிக்கவும் தயார் : மீண்டும் இணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கின்றோம் - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை மீறி அமைச்சுப் பதவிகளை ஏற்றவர்கள், தமது பதவிகளை துறந்து மீண்டும் வருவார்களெனில் அவர்களை இணைத்துக் கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். அவர்களுக்காக கட்சியில் நாம் வகிக்கும் பதவிகளை அர்ப்பணிக்கவும் தயார் என்று பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பிலும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வது தொடர்பிலும் சுமார் 3 மணித்தியாலங்கள் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட்டது.

கொள்கை கட்டமைப்பொன்றுக்குள் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது இலக்காகும். அதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மத்திய குழுவின் தீர்மானத்தை மீறி அமைச்சுப் பதவிகளை ஏற்றவர்கள், கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியை கைவிட்டுச் சென்றாலும் ஏனையோர் எம்முடனேயே இருக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்றிருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் பதவிகளை இழக்க வேண்டியேற்பட்டால், அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.

அமைச்சுப் பதவிகளை ஏற்றவர்கள் அவற்றை விட்டு, மீண்டும் கட்சியில் இணைந்தால் அவர்களுக்காக நாம் தற்போது கட்சிகளில் வகிக்கும் பதவிகளை அவர்களுக்காக விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவே உள்ளோம். அவ்வாறில்லை எனில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியேற்படும் என்றார்.

No comments:

Post a Comment