சிறிதரனின் கருத்துக்கு தவராசா முழு வரவேற்பு : சுமந்திரனின் தீர்மானங்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

சிறிதரனின் கருத்துக்கு தவராசா முழு வரவேற்பு : சுமந்திரனின் தீர்மானங்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு

எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறிய விடயத்தை தாம் முற்று முழுதாக ஏற்பதாக பிரபல சட்டத்தரணியும் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவருமான தவராசா தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

“பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய இந்த விடயத்தினை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கப்படும் பொழுது அந்த முடிவு அனைவராலும் இறுதி செய்யப்பட வேண்டும்.

தலைவர் ஒரு முடிவு எடுத்தால்கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் அபிப்பிராயங்கள் கோரப்பட வேண்டும் அல்லது மத்திய குழுவில் உள்ள பாராளுமன்ற குழுவாக இருந்துகூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

அந்த முடிவு ஒரு குழுவினால் எடுக்கப்பட்டதாக இருந்தாலும், தனிப்பட்டதாக இருந்தாலும் யாரேனும் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது பற்றி தொடர்ச்சியாக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன்.

தன்னிச்சையான முடிவினை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் தமிழ் அரசு கட்சி நிலைத்து நிற்கும்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன். ஒரு முடிவினை எடுக்கும் போது பாராளுமன்றத்திலே ஆதரிப்பதா இல்லையா என்பதை முடிவினை எடுத்து அதில் பெரும்பாலும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற குழுவில் அவ்வாறு முடிவு வரவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆதரிப்பதா இல்லையா என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர் வாக்களிக்காமல் வெளியேறு சென்று விட்டார்.

ஆனால், இதே சுமந்திரன் ஒரு கட்டத்தில், யாராவது வாக்களிக்காமல் செல்வார்களா இருந்தால் புறக்கணிப்பவர்களாக இருந்தால் அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறி இருந்தார்.

ஆனால் அன்றைய செயற்பாட்டை பார்க்கும்போது அப்படி கூறிய சுமந்திரன் அவர்கள் எதிர்த்து வாக்களிக்கவும் இல்லை முதுகெலும்பில்லாதவர்போல செயல்பட்டு இருக்கின்றார்.

இந்த விடயத்தை தான் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகின்றேன். ஒரு கட்டுக்கோப்பிற்காக ஒரு கட்சிக்குள்ளே ஒரு தலைமைத்துவத்தினுடைய முடிவாக இருந்தால்கூட அனைவரும் ஒருங்கிணைப்போடு எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் நிறுவனம் அல்ல. மக்களின் கட்சி மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து அமர்ந்திருக்கின்றோமே தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது. 

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறிப் பல கட்சிகள் உருவாக்கியுள்ளனர். ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக உயர் நீதிமன்ற நீதி அரசராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் உட்பட பலர் வெளியேறிச் சென்று இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால் பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது.

அதாவது தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது கட்சியிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்” என்று இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவருமான தவராசா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment