முறைப்பாடளிக்கச் சென்ற ஊடகவியலாளரை அலுவலகத்துக்குள் முடக்கி அச்சுறுத்தல் : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

முறைப்பாடளிக்கச் சென்ற ஊடகவியலாளரை அலுவலகத்துக்குள் முடக்கி அச்சுறுத்தல் : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற் சார் நிபுணர்கள் நடாத்திய ஆரப்பாட்டத்துக்கு இடையூறு விளைவித்து அடக்குமுறையை பிரயோகித்ததமை தொடர்பில் இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க கோட்டை பொலிஸார் மறுத்துள்ள நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நளின் தில்ருக் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளையே இவ்வாறு ஏற்க கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்துள்ளார்.

இதன்போது முறைப்பாடளிக்கச் சென்ற இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவையும், அவருடன் சென்ற சட்டத்தரணியையும் பொலிஸ் பொறுப்பதிகாரி சாகர லியனகே அவரது உத்தியோகபூர்வ அறைக்குள் பூட்டி, ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவரின் கைகளை மடக்கி, இழுத்து கைகளில் இருந்த தொலைபேசியை பறிக்க முற்பட்டதாகவும், கொடூரமான முறையில் நடந்துகொண்டதாகவும் கூறி பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலையம், உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாட்டை ஏற்க மறுத்தமையால், அது தொடர்பிலான முறைப்பாட்டையும், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கொடூரமான நடத்தை தொடர்பில் தனியான முறைப்பாடும் இவ்வாறு நேற்று (11) பகல் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை பொலிஸ் தலைமையகம் உறுதி செய்தது.

கொழும்பு காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து 10 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்திருந்தார். அதன்படி அந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது அந்நடவடிக்கைகளுக்கு பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்னர் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் ஆகியோர் குறிப்பிட்டு இடையூறு செய்திருந்தனர்.

எனினும் தாம் எழுத்து மூலம் கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி முறைப்பாடளிக்கச் சென்ற போதே, கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் முறைப்பாட்டாளர் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment