இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க விசேட நடமாடும் சேவை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 29, 2022

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க விசேட நடமாடும் சேவை

(எம்.மனோசித்ரா)

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதற்கான விசேட நடமாடும் சேவைகளை திங்கட்கிழமை (31) மற்றும் செவ்வாய்கிழமை (01) தினங்களில் வடக்கில் முன்னெடுக்கவுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 7,000 க்கும் அதிகமான இலங்கை அகதி குடும்பங்களைச் சேர்ந்த 12,500 க்கும் மேற்பட்டோர் வட மாகாணத்தில் குடியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்கமைய அவர்களது இலங்கை குடியுரிமையைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி வழங்குவதற்காகவே இந்த இரு நாட்கள் நடமாடும் சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய திங்கட்கிழமை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை யாழ் மாவட்ட செயலக வளாகத்திலும், செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலைய வளாகத்திலும் (கிளிநொச்சி மாவட்டச் செயலக பயிற்சி நிலையம்) இந்நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள், பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வது, திருத்தம் செய்வது மற்றும் காணாமல் போன அடையாள அட்டைக்கான பிரதி ஒன்றினை வழங்குவதற்குரிய சேவைகள், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு, குடியகல்வித் திணைக்களம், பதிவாளர் நாயகத்தின் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் ஆகியன தமது சேவைகளை வழங்கவுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் போரினாலும் மற்றும் வேறு இடர்களினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குரிய நடவடிக்கைக்காக தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோன்று காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் காணாமல் போனோர் முறைப்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள், காணாமல் போனனோர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் மத்தியஸ்தசபை ஆணைக்குழுவினால் காணிகள் சம்பந்தமான விசேட மத்தியஸ்த சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment