(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி கொண்டாட்டத்துக்காக தோட்டக் கம்பனிகளால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா போதுமானதாக இல்லை. அதனால் அதனை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தீபாவளி கொண்டாட்டம் இந்து பக்தர்களின் மிக முக்கியமான கொண்டாட்டமாகும். மலையக தோட்டப்புறங்களில் பெரும்பாலானவர்கள் இந்து பக்தர்களே இருக்கின்றனர். அதனால் அவர்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு தோட்டக் கம்பனிகள் கடந்த காலங்களில் 5 ஆயிரம் ரூபா அடிப்படையில் வழங்கி வந்திருக்கின்றது.
என்றாலும் தற்போதுள்ள பாெருளாதார நெருக்கடி மற்றும் பாரிய பண வீக்கத்துக்கு மத்தியில் தீபாவளி கொண்டாடுவதற்கு 5 ஆயிரம் ரூபா எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அதனால் தோட்டப்புற மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியாக கொண்டாட குறைந்த பட்சம் 15 ஆயிரம் ரூபாவாவது பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடன் அடிப்படையிலேயே இது தோட்டக் கம்பனிகளால் வழங்கப்படுகின்றது. எனவே தேயிலை சபை ஊடாக தலையிட்டு இதனை தோட்டப்புற இந்து மக்களுக்கு பெற்றுக் கொடுக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
இதன்போது இதற்கு பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த பணத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி இருக்கின்றோம். அதனால் கடன் அடிப்படையில் இதனை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தேயிலை சபைக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment