(எம்.ஆர்.எம்.வசீம்)
கோப் குழுவில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை மின்சார சபை முன்னாள் தலைவர் எம்.சீ.சீ. பெர்டினாண்டோ தொடர்பாக கோப் குழு அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கும் என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ கடந்த வாரம் கோப் குழுவில் ஜனாதிபதி தொடர்பில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபையின் செயலாற்றுகை தொடர்பாக அறிவதற்காக அதன் அதிகாரிகள் கோப் குழுவுக்கு கடந்த வாரம் அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மின்சார சபையின் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ, இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கும் அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் பிரசாரமாகிய பின்னர் ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார். அதன் பின்னர் எம்.சி.சி. பெர்டினாண்டோவும் தான் தெரிவித்திருந்த கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் அனுப்பி இருந்த கடிதம் நேற்று எனக்கு கிடைத்தது. எனவே அவர் தொடர்பில் அடுத்த வாரம் கோப் குழு கூடி தீர்மானம் எடுப்போம் என்றார்.
மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு கையளிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அழுத்தம் பிரயோகித்ததாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷ் தன்னிடம் கூறினார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ கோப் குழுவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment