நாட்டில் இன்றையதினம் (03) இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (03) முற்பகல் பேருவளை, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல - மருதானை வீதியில் லொறியில் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலியானவர், மருதானை, பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், இளநீர் விற்பனை செய்பவர் என்றும், விற்பனைக்காக, லொறியில் இளநீர் சேகரிப்பதற்காக சென்ற நிலையில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, பாணந்துறை நிர்மல மாவத்தையில் இன்று (03) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மரணமடைந்த குறித்த நபர், மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் காலி வீதி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, வாதுவை, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரந்திக மதுஷான் எனும் 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, குறித்த நபர் வீதியில் வீழ்ந்துள்ளதோடு, துப்பாக்கிதாரி மீண்டும் மோட்டார் சைக்கிளை திருப்பியவாறு அவரை நோக்கி வந்து மீண்டும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் சென்ற மற்றைய நபருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment