விவசாயத்தில் ஈடுபட அரச ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை : கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு பொருந்தாது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 14, 2022

விவசாயத்தில் ஈடுபட அரச ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை : கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு பொருந்தாது

அரச ஊழியர்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமை தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, தமது வீட்டுத் தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் அரச ஊழியர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு, இவ்வாறு விடுமுறை வழங்க பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு வாரத்தின் வெள்ளிக்கிழமை தினத்தில் அரச நிறுவனங்களை மூடி ஊழியர்களுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

ஆயினும் நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம், விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இவ்விடுமுறை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment