தற்போதைய சூழ்நிலையில் இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையை தூண்டும் செயற்பாடுகள் இடம்பெறலாம் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை பொதுமக்கள் தாக்கியதை அடுத்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரி மாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
"இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையை தூண்டும் செயற்பாடுகள் இடம்பெறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு, நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் ஒரு அற்புதமான போராட்டத்தை நடத்திய நமது குடிமக்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்." என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆபத்தை முடிவுக்குக் கொண்டு வர பொதுமக்கள் தங்களது ஒழுங்கமைப்பு திறன்களை பயன்படுத்த வேண்டும் என்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment