லிபியாவுக்கு நடந்த நிலையே எமது நாட்டுக்கும் ஏற்படும், அதற்கு இடமளிக்காது உணர்ந்து செயற்படவும் : பிரதி சபாநாயகர் தெரிவின்போது அரசாங்கத்தின் பெரும்பான்மை என்ன என்பது வெளிப்படும் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

லிபியாவுக்கு நடந்த நிலையே எமது நாட்டுக்கும் ஏற்படும், அதற்கு இடமளிக்காது உணர்ந்து செயற்படவும் : பிரதி சபாநாயகர் தெரிவின்போது அரசாங்கத்தின் பெரும்பான்மை என்ன என்பது வெளிப்படும் - விமல் வீரவன்ச

(எம்.ஆர்.எம்.வசீம்)

கோபத்துடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டுசெல்லும். அவ்வாறானதொரு நிலைக்கு இடமளித்தால் லிபியாவுக்கு நடந்த நிலையே எமது நாட்டுக்கும் இடம்பெறும். அதற்கு இடமளிக்கக்கூடாது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் மே தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) பத்தரமுல்லை அபேகமவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களும் காரணமாகும். அரசாங்கம் பிழையான தீர்மானங்களை எடுக்கும்போது அது தொடர்பில் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.

என்றாலும் எமது பேச்சுக்கள் எடுபடவில்லை. தொடர்ந்து பிழையான தீர்மானங்களை எடுக்க ஆரம்பித்தபோது கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வெளியில் சென்று, அரசாங்கத்தின் தவறுகளை மக்கள் முன் பேச ஆரம்பித்தோம்.

மக்கள் இன்று வாழ்வதற்கு வழியின்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களால் தொடர்ந்து பொறுமையாக இருக்க முடியாமலே வீதிக்கி இறங்கி இருக்கின்றனர். அரசாங்கம் பதவி விலகி புதிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றே மக்கள் கோறுகின்றனர்.

மக்களின் கோரிக்கையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் இந்த போராட்டம் கோபத்துடன் மேற்கொள்ளப்படும் போராட்டமாக மாற்றுவதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. கோபத்துடன் மேற்காெள்ளப்படும் போராட்டம் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டுசெல்லும் அந்த நிலைக்கு கொண்டுசெல்ல இடமளிக்கக்கூடாது.

மக்களின் இந்த போராட்டத்தை ஒரு சிலர் திசைதிருப்பி நாட்டை அராஜக நிலைக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் லிபியாவுக்கு ஏற்பட்டதுதான் எமது நாட்டுக்கும் ஏற்படும். அதனால் இந்த பிரச்சினை நீடிப்பதற்கு இடமளிக்காமல் மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும். இதனை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அரசாங்கம் தொடர்ந்து தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துக் கொண்டு இந்த பிரச்சினையில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கின்றது. ஆனால் அடுத்த பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் முதலாம் தினத்தில் பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

இதன்போது எமது சுயாதீன அணியில் இருந்து நாங்களும் ஒருவரை நியமித்தால் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். அப்போது அரசாங்கத்தின் பெரும்பான்மை என்ன என்பது வெளிப்பட்டு விடும். அந்த நிலைக்கு செல்வதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு மரியாதை இருக்கின்றது. வெற்றி கொள்ள முடியாத யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு அவரின் தலைமைத்துவம் பிரதான காரணமாகும். யுத்த வெற்றியின் கெளரவம் அவருக்கு இருக்கின்றது. என்றாலும் தற்போது நாட்டின் மக்களின் கோரிக்கை என்ன என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரதமரை சுற்றி இருக்கும் ஒரு சிலரே பிரதமர் தீர்மானம் ஒன்றை எடுப்பதை தடுத்து வருகின்றனர். அவர்களின் திருட்டு நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ளவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

எனவே தொடர்ந்து இவ்வாறு இருக்க முடியாது. நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். அதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இடைக்கால அரசாங்கத்துக்கு புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும். அதேபோன்று அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரலாம். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்தை தோற்கடித்த பின்னர், அடுத்த கட்டம் என்ன செய்வதென்று முடிவில்லாமல் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment