(இராஜதுரை ஹஷான்)
சமூக கட்டமைப்பில் தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் மூன்று மாத காலத்திற்குள் தீர்வில்லாவிடின் மக்கள் மத்தியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும். சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்வது சாத்தியமற்ற தன்மையில் உள்ளது. சகல கட்சிகளும் தற்போதைய நிலையில் பொதுக் கொள்கைக்கமைய செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்காக 43ஆவது படையணி ஐந்து கொள்கைத் திட்டத்தை முன்வைத்திருந்தது.
இருப்பினும் துரதிஷ்டவசமாக இலங்கை கடந்த மாதம் 12ஆம் திகதி அரச முறை கடன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்துள்ளது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பல் தரப்பு கடன்களை மீள் செலுத்துவதாகவும், இரு தரப்பு கடன்களை மீள் செலுத்த முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். அதேபோல் சர்வதேச சந்தையில் பெற்றுக் கொண்ட கடன்களை செலுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளோம். எமது அரசமுறை கடன் செலுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. சர்வதேச பிணைமுறிக்கான வட்டியை எதிர்வரும் மாதம் செலுத்த வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளோம். மருந்து, உணவு, வலுசக்தி ஆகிய அடிப்படை துறைகளில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
வலுசக்தி துறை பாதிப்பினால் கைத்தொழில் துறை வீழ்ச்சியடைந்து, தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் நாட்டின் பண வீக்கம் துரிதமாக அதிகரித்துள்ளதால் மேலும் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
நாட்டின் வங்கி கட்டமைப்பு பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். டொலர் நெருக்கடி காரணமாக வங்கி கட்டமைப்பு தற்போதும் ஒப்பீட்டளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி தற்போது பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இன்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.
அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தால் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள தற்போதைய அராஜக நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையும். நாட்டில் என்றுமில்லாத அளவிற்கு நிறைவேற்று மற்றும் சட்டவாக்கத்துறை அதிகாரம் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஆரம்பகட்ட இணக்கப்பாட்டை தற்போது எட்டியுள்ளோம். இரண்டு வார காலத்திற்குள் பொருளாதார வரைபினை செயற்படுத்துவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை மத்திய வங்கி மற்றும் நாணய சபை, திறைசேரி, தேசிய இறைவரி திணைக்களம், சுங்கம் மற்றும் மது வரி திணைக்களம், அரச வங்கிகள், மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அவசியமானது. அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் 3 மாத காலத்திற்குள் தீர்வு காணாவிடின் எதிர்வரும் காலங்களில் சமூக கட்டமைப்பில் அராஜக நிலைமை உக்கிரமடையும். பொருளாதார மீட்சிக்காக தற்போது வகுக்கப்படும் குறுங்கால திட்டங்கள் தோல்வியடைந்தால் முன்னெடுக்கம் திட்டம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
வலுசக்தி மற்றும் மின்சாரத் துறைகளில் செயற்படுத்தப்படும் கொள்கைள் காலத்தின் தேவைக்கமைய வகுக்கப்பட வேண்டும். புதிய கொள்கை வகுப்பு குறித்து நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும், அரசியல் கட்சிகள் பொது கொள்கைக்கமைய செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment