(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டில் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஓர் அணியாக செயற்பட வேண்டியது அவசியம். இதற்காக அந்தந்த மாவட்ட மக்கள் தத்தமது மக்கள் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை ஒளிப்பரப்பாளர்கள் ஸ்தாபனத்தின் தலைவர் அசங்க ஜயசூரிய தெரிவித்தார்.
மேலும், நாட்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் எதிர்வரும் 12 மாத காலத்திற்கு ஒரேயொரு தொலைக்காட்சி நிறுவனத்தை தவிர்ந்த, நாட்டில் காணப்படுகின்ற அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி, செய்திகளைத் தவிர்ந்த ஏனைய நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசியல்வாதிகளை அழைப்பதை தவிர்ப்பதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஸ்தாபனத்தின் தலைவர் அசங்க ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை தவிர்த்து விட்டு, துறைசார் நிபுணர்களை, குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தீர்வுகளை எட்டுவதற்கான திட்டங்களையும், யோசனைகளையும் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தி கூறக்கூடி பொருளாதார நிபுணர்களை அழைத்து நிகழ்ச்சிகளையும், நேர்காணல்களையும் நடத்துவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.
எனினும், ஒரேயொரு தொலைக்காட்சி சேவை மாத்திரம் இந்த தீர்மானத்திற்கு உடன்படிவில்லை. ஏனெனில், அரசில்வாதிகள் அவர்களது நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் அமைத்து கொடுக்கப்படுவது அவசியம் என்ற காரணத்தினாலேயே குறித்த தொலைக்காட்சி நிறுவனம் அந்த தீர்மனத்தை எடுத்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநரான நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான மஹிந்த சிறிவர்தன ஆகிய இருவரும் பொறுப்பேற்றதன் பின்னர், அவர்களது கொள்கைகளையும் யோசனைகளையும் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தி நாட்டை முன்னோக்கி செல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது, இதற்காக வேண்டி, பொருளாதார நிபுணர்கள் ஊடாக அறிவையும் தெளிவையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளையும் நேர்காணல்களையும் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு பொளாதாரத்தை சீர் செய்வதற்கு நிலையான அரசாங்கமொன்று அமைக்கப்படுவதற்கு சகல கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக மக்கள் அனைவரும் தத்தமது மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேலும், எதிர்வரும் சில மாத காலப்பகுதியில் நாட்டில் நிலவவுள்ள நிலைமை குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துல் அவசியம் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆகவே, எதிர்வரும் சில மாதங்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருந்ததாகவும், அதிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஓரணியாக செயற்படுவது அவசியமாகும்" என்றார்.
No comments:
Post a Comment