மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 29, 2022

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

(எம்.மனோசித்ரா)

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னாள் பிரதமருடன், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கும், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிற்கும் முதலாம் திகதி புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபயை திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது வட்டரெக்க சிறைச்சாலைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment