ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபெலிக்ஸ் பொலானோஸ் ஆகியோரின் செல்போன்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசாங்கம் இன்று (02) திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரின் செல்போன்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கடந்த வருடம் பாதிக்கப்பட்டன.
இந்த பெகாசஸ் மென்பொருள் அரசாங்க நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அரசு அதற்கு அனுமதி வழங்காத நிலையில் யாரோ மூன்றாம் நபர் அந்த மென்பொருள் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சரின் செல்போன்களை உளவு பார்க்க முயற்சித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் பிரதமரின் மொபைல் போன் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அதை தொடர்ந்து அடுத்த மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சரின் செல்போனும் பாதிக்கப்பட்டது. இது நிச்சயம் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது.
இந்த உளவு நடவடிக்கையை நாட்டின் வெளியில் இருந்து யாரோ செய்திருக்கிறார்கள். இதற்கு சட்ட ரீதியான அனுமதி எதுவும் அரசு வழங்கவில்லை என கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் ஸ்பெயின் நாட்டின் தேசிய நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment