எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்றவாறு பஸ் கட்டணங்கள் 25% - 30% வரை அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், புதிய கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படுமெனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறித்த கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் பயன்படுத்தும் வகையிலான சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கட்டணங்களைத் திருத்துவது குறித்து கவனம் செலுத்துமாறு போக்கு வரத்துத் துறையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் நிறுவனங்களின் தலைவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் அரசாங்க ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு அழைக்கப்படுவதாகவும், வீட்டிலிருந்து வேலை செய்வதையும் ஊக்குவிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் கணக்கில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment