(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கேற்ப போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் தனியார் எரிபொருள் பவுசர்கள் சேவையில் இருந்து விலகினால், அரசாங்கத்திற்கு சொந்தமான பவுசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பவுசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினை அடிப்படையாகக் கொண்டு தமக்கான போக்குவரத்து கட்டணத்தையும் 60 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்தமையால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 'எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைள் 3 துறைகளால் முன்னெடுக்கப்படுகிறது.
அரசுக்கு சொந்தமானது, எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் பவுசர்கள் மற்றும் தனியார் பவுசர்கள் என்பன அம்மூன்றுமாகும்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் இதுவரையில் கட்டணங்கள் 5 முறை மாற்றப்பட்டுள்ளன. அனைவரும் ஒப்புக்கொண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி 84 சதவீத அதிகரிப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில்லும் தனியார் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்தால், நாங்கள் மற்ற 2 துறைகளைப் பயன்படுத்தி எரிபொருளை தடையின்றி விநியோகிப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment