(எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான செயற்குழு (கட்சித் தலைவர்கள்) தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் 5 ஆம் திகதி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு 2021.12.24 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கட்டளை மீதான விவாதம் இடம்பெறும்.
6 ஆம் திகதி புதன்கிழமை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அன்றையதினம் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழான கட்டளைச்சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற இருக்கின்றது.
அத்துடன் 7 ஆம் திகதி மிகைவரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற இருக்கின்றது.
அத்துடன் இறுதிநாளான 8 ஆம் திகதி இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக இடம்பெற இருக்கின்றது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை விவாதத்தை நடத்துவதற்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாயர் நாயகம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment