பொலிஸ் காவலின் கீழ் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் அவசியம் - அம்பிகா சற்குணநாதன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

பொலிஸ் காவலின் கீழ் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் அவசியம் - அம்பிகா சற்குணநாதன்

(நா.தனுஜா)

நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இராணுவமயப்படுத்தப்படுவது குறித்தும், போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டிருந்த நபர்கள் உயிரிழக்கும் விதம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் கரிசனைகளை வெளிப்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தடுப்புக் காவலின் கீழ் இடம்பெற்ற மரணங்கள் குறித்து போதிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையானது தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கு தொடர்வதையும் அரச கட்டமைப்புக்களால் வன்முறை கையாளப்படுவதையும் காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து நேற்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற விவாதத்தில் இணையவழித் தொழில்நுட்பம் ஊடாக நிகழ்நிலையில் கலந்துகொண்டு இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள கரிசனைகளை (கருத்துக்களை) நாம் மீள வலியுறுத்துகின்றோம். இந்தப் போக்கின் தொடர்ச்சியாக போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இராணுவமயப்படுத்தப்படுவது குறித்தும், அது மனித உரிமைகள் உள்ளடங்கலாக தனி மனித மற்றும் பொதுச் சுகாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் எமது கரிசனையை வெளியிடுகின்றோம்.

போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டிருந்த நபர்கள் உயிரிழக்கும் விதமும் கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

பொலிஸ் காவலின் கீழான இந்த உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் போதியளவான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை, தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கு தொடர்வதையும் அரசகட்டமைப்புக்களால் வன்முறை கையாளப்படுவதையும் காண்பிக்கின்றது.

மேலும் மனித உரிமைகள்சார் நியமங்களுக்கு முரணான வகையில் தற்போது நடைமுறையில் இருக்கக் கூடிய சட்டங்கள் தொடர்பில் நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் போதைப் பொருளுடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்கு மனித உரிமைகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மையப்படுத்திய ஓர் செயன்முறையைப் பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துன்றோம்.

அதேவேளை தடுப்புக் காவலின் கீழ் இடம்பெற்ற மரணங்கள் குறித்து உரியவாறு விசாரணைகளை மேற்கொள்வதுடன் அச்சம்பவங்களுடன் தொடர்புடைவர்களைக் கண்டறிந்து, அவர்களைப் பொறுப்புக் கூறச் செய்யுமாறும் கோருகின்றோம்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் செயலாற்றுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துக் கட்டமைப்புக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக இயங்குவதை உறுதி செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment