(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் அலட்சியமாக செயற்பட்ட அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமையானது, தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி 'இலங்கையின் ஷெர்லொக் ஹோல்ம்ஸ்' என்று அழைக்கப்படும் ஷானி அபேசேகர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரவி செனெவிரத்ன ஆகியோரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் சூழ்நிலையில், அவர்களுக்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்கு முன்வருமாறு அவர் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு அவசியமான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தும் நோக்கில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அதிகாலை ஜெனிவாவிற்குப் பயணமானார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து நேற்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, சட்டத்தின் ஊடாக குற்றமாக வரையறுக்கப்படாத போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டு எமது பாராளுமன்ற சகாவான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதன் மூலம், அவர் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்குமாறு சர்வசே பாராளுமன்ற ஒன்றியம் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி புறக்கணித்து விட்டார்.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அச்சம்பவம் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துமாறும் நீதியை நிலைநாட்டுமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றபோதிலும், இன்னமும் அவை உறுதி செய்யப்படவில்லை.
இவ்விடயத்தில் அலட்சியமாக செயற்பட்ட அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமையானது, தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி 'இலங்கையின் ஷெர்லொக் ஹோல்ம்ஸ்' என்று அழைக்கப்படும் ஷானி அபேசேகர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரவி செனெவிரத்ன ஆகியோர் இலக்கு வைக்கப்படுவதுடன் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.
மேலும் நபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் வலுகட்டாயமாக போலியான வாக்கு மூலங்களைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அர்த்தமுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயக்கம் காண்பிக்கின்றது.
தமது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் மக்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றார்கள். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மிகுந்த அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இயங்குகின்றார்கள்.
சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்களை இராணுவமயப்படுத்துவதென்பது அரசாங்கத்தின் ஓர் அடையாளமாக மாறியிருக்கின்றது. இன மற்றும் மதரீதியான சிறுபான்மையினர் பதற்றங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.
No comments:
Post a Comment