(இராஜதுரை ஹஷான்)
தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் சிறந்த திட்டத்தை இலங்கை மின்சார சபை இதுவரை செயற்படுத்தவில்லை. தனியார் தரப்பினரிடமிருந்து அவசர மின் கொள்வனவிற்காக வெகுவிரைவில் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் மின் விநியோக தடை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மின்னுற்பத்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண மின்சார சபை இதுவரை நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை செயற்படுத்தவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை, நீர் மின்னுற்பத்தி ஆகிய காரணிகளினால் 13 மணித்தியாலங்கள் மின் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது என மின்சார சபை ஊடகங்களுக்கு கருத்துரைக்கிறது.
எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டு மக்கள் இருளில் புத்தாண்டினை கொண்டாட வேண்டிய நெருக்கடி நிலைமை ஏற்படும் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பது பயனற்றதாகும்.
மின்னுற்பத்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையில் தனியார் தரப்பினரிடமிருந்து அவசர மின் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை தோற்றம் பெறும். ஆகவே அரசாங்கம் நிச்சயம் வெகுவிரைவில் மின்சார கட்டணத்தையும் அதிகரிக்கும்.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் டொலர் நெருக்கடி தீவிரமடையும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்தும் அதனை முகாமைத்துவம் செய்ய எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புக்கு மின்சார சபையும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment