நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது - அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது - அமைச்சர் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். நெருக்கடி நிலைமையை சீர் செய்யவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடந்து மக்கள் மத்தியில் வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் தனி நபரையும், கட்சியையும் வெற்றி பெற செய்வதற்கு துணைபோகப் போவதில்லை. நாட்டை வெற்றி பெற செய்ய ஒன்றிணைந்து செயற்படுவோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசியத்தின் தீர்மானமிக்க தருணத்தில் உள்ளோம். சுதந்திர இலங்கை விடுதலைப் புலிகள் அமைப்பு காலத்தை காட்டிலும் தற்போது பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது என்பதை எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தையும், மின் விநியோக தடையையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் கண்டு விளங்கிக் கொள்ள முடியும்.

நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்பதை முதலில் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையை ஏற்றுக் கொண்டால்தான் சவால்களை ஒருமித்து வெற்றி கொள்ள முடியும். நாடு பாரிய வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் வகையில் உள்ளது என்பதை கடந்த வருடம் ஜுன் மாதமளவில் அறிவித்தேன்.

எனது கருத்து விமர்சிக்கப்பட்டதே தவிர குறிப்பிட்ட விடயத்தின் பாரதூரத்தன்மை ஆராயப்படவில்லை. எனக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிக்கையை மாத்திரம் வெளியிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது எவ்வாறு என்பது குறித்து பலமுறை பங்காளி கட்சிகளுக்கிடையில் ஆராய்ந்துள்ளோம்.

அரசாங்கத்திடம் இவ்விடயம் குறித்து குறிப்பிட்டு தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது. வழமையான கொள்கையை மாற்றியமைத்து செயற்படுத்த வேண்டியதை செயற்படுத்தவே முயற்சிக்கிறோம்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டை முன்னேற்றும் நோக்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். தனி நபரையும், கட்சியையும் வெற்றி பெற செய்யும் செயற்பாடுகளில் இனி ஒன்றிணையப் போவதில்லை. நாட்டை வெற்றி பெற செய்யும் நோக்கில் ஒன்றிணைவோம் என்றார்.

No comments:

Post a Comment