(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்கள் எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி வரை பொறுமைகாக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், டொலர் நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த காரணத்தினால் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பொதுமக்கள் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை.
எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை பொறுமை காக்க வேண்டும்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் எரிபொருள் எதிர்வரும் 4 ஆம் திகதி அல்லது 5ஆம் திகதி கிடைக்கப் பெறுவதை தொடர்ந்து எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியும்.
எரிவாயு சிலிண்டர் விநியோக பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என உரிய நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு அரசியல் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஒருபோதும் தீர்வு காண முடியாது. நடைமுறை யதார்த்த நிலைமையினை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எரிபொருளின் விலையேற்றத்தை தொடர்ந்து புகையிரத கட்டணத்தையும் திருத்தியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவையின் 3ஆம் வகுப்பு ஆரம்ப கட்டணத்தை 2 ரூபாவினால் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புகையிரத பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டணம் திருத்தியமைக்கப்படும்.
தனியார் மற்றும் அரச பேரூந்து போக்குவரத்து சேவைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.
சுற்றுலாத்துறை, சுகாதார சேவை மற்றும் அதனுடன் ஒன்றினைந்த சேவைகள், கப்பல் சேவைத்துறைக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தேசிய போக்குவரத்து சேவை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. நெருக்கடியான சூழ்நிலைமை இயலுமான அளவு முகாமைத்துவம் செய்து வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment