(இராஜதுரை ஹஷான்)
அரசியல் போராட்டங்கள் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை 2029 ஆம் ஆண்டு வரை தொடரும் என்பதே உண்மை. நாட்டு மக்கள் யதார்த்த நிலைமையினை விளங்கிக் கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நிலைமை கைமீறி சென்ற காரணத்தினால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது.
பொருளாதர மற்றும் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து சர்வதேச பொருளாதார நிபுணரின் ஆலோசனையை பெறுவதற்கு நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி சேவை துறையில் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அரசாங்கத்தையும், முற்பட்ட அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றதாகும். கடன் பெற்று அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் கொள்கையினை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
திறந்த பொருளாதார கொள்கைக்கமைய ஏற்றுமதி சேவைத்துறை ஊடாக வருடாந்தம் 10 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கப் பெறும் போது, இறக்குமதி செலவு 20 பில்லியன் டொலர்களை காட்டிலும் உயர்வடைகிறது வருமானத்திற்கும், செலவிற்கும் இடையிலான வேறுப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கப் பெற்றது. அக்காலப்பகுதியில் உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்தது.
2014ஆம் ஆண்டு எரிபொருள் இறக்குமதிக்காக செலவான நிதியுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டு எரிபொருள் விலை குறைவடைந்ததால் 2 பில்லியன் டொலர் அரசாங்கத்திற்கு சேமிப்பானது.
பொருளாதார முன்னேற்றத்திற்கு சாதகமான சூழல் காணப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் அதனை முறையாக செயற்படுத்தவில்லை. இறக்குமதி பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இறக்குமதி துறையினை முழுமையாக நம்பியிருக்கும் நிலைமையை நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவித்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை முழுமையாக பாதித்தது. 2018ஆம் ஆண்டு சுற்றலாத்துறை சேவை ஊடாக 4.3 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றது. கொவிட் தாக்கம் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியதால் 8 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிட்டது.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பூகோள பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது அதன் தாக்கத்தை இலங்கையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு மட்டுப்பாடு, அந்நிய செலாவணி வீழ்ச்சி, இறக்குமதி சேவைக்கான கட்டண உயர்வு, எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய மருந்து மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றம் அதற்கான சேவை கட்டணம் அதிகரித்தல் ஆகிய அடிப்படைய பிரச்சினைகளை தற்போது எதிர்க்கொள்கிறோம்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது.
நெருக்கடி நிலைமையினை சீர்செய்ய முடியாத காரணத்தினால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பில் சர்வதேச பொருளாதார நிபுணர் ஒருவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், திறைச்சேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பாராளுமன்றம் பொறுப்புக்கூற வேண்டும். 2003ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'நிதி முகாமைத்துவ சட்டம் 'இதுவரை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் தேவைக்கேற்ப அச்சட்டத்தை திருத்தியமைத்துள்ளதால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் போராட்டங்களின் ஊடாக ஒருபோதும் தீர்வு காண முடியாது. யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைமை 2029ஆம் ஆண்டு வரை தொடரும் என்பதே உண்மை. நாட்டு மக்கள் தற்போதைய யதார்த்த நிலைமையை விளங்கிக் கொள்ள வேண்டும். புத்தாண்டு காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்கவும், நிவாரணம் வழங்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்
No comments:
Post a Comment