ஊழியர் சேமலாப நிதியத்தில் வரி அறவிடும் வர்த்தமானியை மீளப் பெறாவிட்டால் ஜனாதிபதியுடன் நேரடியாக அரசியல் போராட்டத்தில் குதிப்போம் - ஹர்ஷ டி சில்வா சவால் - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

ஊழியர் சேமலாப நிதியத்தில் வரி அறவிடும் வர்த்தமானியை மீளப் பெறாவிட்டால் ஜனாதிபதியுடன் நேரடியாக அரசியல் போராட்டத்தில் குதிப்போம் - ஹர்ஷ டி சில்வா சவால்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஊழியர் சேமலாப நிதியத்தில் 25 வீத வரி அறவிடும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெறாவிட்டால், இதற்கு எதிராக சகல மக்களையும் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியுடன் நேரடியாக அரசியல் போராட்டத்திற்குள் குதிக்கும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, எதிர்க்கட்சித் தலைவர் முக்கியமான சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் நிதி அமைச்சர் இன்று வரை சபையில் பதில் தெரிவிக்கவில்லை. இவ்வாறு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காது தலைமறைவாகும் அரசாங்கத்தை இதற்கு முன்னர் நாம் பார்த்ததில்லை.

நிதி அமைச்சரின் நேரடி அரசியல் தீர்மானத்திற்கு அமைய பல தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு என்ற திட்டத்திற்கு 100 பில்லியன் ரூபா தேவைப்படும். கடந்த வாரம் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதி இல்லை, இனியும் பணம் அச்சடிக்க முடியாது. ஆகவேதான் ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசாங்கம் கைவைக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிதியில் மூன்று ட்ரில்லியன் ரூபா உள்ளது. அதுவும் 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பிரகாரமே இந்த தொகை உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கையை இன்னமும் அரசாங்கம் வெளியிடவில்லை.

எனவே இறுதி இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும். 250 பில்லியன் இந்த இரண்டு ஆண்டுகளில் இலாபமாக கிடைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஆகவே இவ்வாறு மக்களின் பணத்தை கொள்ளையடிக்க இடமளிக்க முடியாது. ஊழியர் சேமலாப நிதியத்தில் 25 வீத வரி அறவிடும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெறாவிட்டால், இதற்கு எதிராக சகல மக்களையும் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியுடன் நேரடியாக அரசியல் போராட்டத்திற்கு குதிப்போம் என்றார்.

No comments:

Post a Comment