(நா.தனுஜா)
இந்திய வம்சாவளிகளான மலையகத் தமிழ் மக்கள் இப்போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமல் இருப்பதென்பது இந்திய அரசாங்கத்தை அவமதிக்கின்ற செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்ற போதிலும் கூட, தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வரி விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதன் விளைவாக நாடளாவிய ரீதியில் தொழில் புரியும் சாதாரண பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படும் அதேவேளை, ஏற்கனவே ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நாடகத்தினால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் மலையக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்.
இந்த வரி விதிப்பின் ஊடாக பெருந்தோட்டமக்கள் நெடுங்காலமாக சிறுகச்சிறுக சேமித்த பணத்தையும் கொள்ளையடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
தற்போதைய அரசாங்கமோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ நாட்டை ஆட்சி செய்யும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மலையக மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.
மலையக மக்களுக்கு உரியவாறான தொழில் இல்லை. பிராஜாவுரிமை இல்லை. பெருந்தோட்ட மக்களின் காணிகளில் வெளி நபர்கள் குடியமர்த்தப்படுகின்றார்கள்.
மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்.
அண்மையிலே அபிவிருத்தி என்ற போர்வையில் பசறை, கோணக்கலை பகுதியில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரால் சிறுபான்மை பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டு, வெளிநபர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பெருந்தோட்டக் காணிகள் அபகரிக்கப்படுவதன் விளைவாக மலையக மக்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவது குறித்து மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துத் தொழிற் சங்கங்களும் தமது நிலைப்பாடுகளை நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும்.
இவ்விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு வருகின்றது.
எமது நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் மிகவும் முக்கியமானவையாகும். இந்திய வம்சாவளிகளான மலையகத் தமிழ் மக்கள் இன்றளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது இந்திய அரசாங்கத்தை அவமதிக்கின்ற செயல் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment