(எம்.மனோசித்ரா)
சுகாதார தொழிற்சங்கங்கள் நான்காவது நாளாகவும் நேற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று பிற்பகல் நீதிமன்றத்தினால் அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவைகளுக்கு பெருமளவான வைத்தியசாலைகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன.
தமக்கான தீர்வுகள் துரிதமாக வழங்கப்படா விட்டால் ஓரிரு தினங்களில் சகல சுகாதார ஊழியர்களையும் கொழும்பில் ஒன்றிணைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன. இந்நிலையிலேயே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகிக்கப்படாமையால் அரச ஒசுசலவில் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் சேவை, முழு நேர மற்றும் இடைக்கால சுகாதார சேவை என்பவற்றை உள்ளடக்கிய 18 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சுகாதார சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம்
இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் சகல அரச வைத்தியசாலைகளிலும், அரச மருத்துவ நிறுவனங்களிலும் சகல மருத்துவ சேவைகளும் ஸ்தம்பித்திருந்தன.
இதன் காரணமாக கிளினிக்குகள், இரசாயன பரிசோதனைகள், நோயாளர்களுக்கு மருந்து விநியோகித்தல், கதிரியக்க பரிசோதனைகள் (ஸ்கேன்), நோயாளர் விடுதிகளில் சிகிச்சையளித்தல், பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டன.
அரசாங்கத்தால் கூட இதனை நிறுத்த முடியாமலுள்ளது. எம்மால் என்ன செய்ய முடியும்?
'சிகிச்சை பெறுவதற்காக வந்து ஐந்தாவது நாளாகவும் வெறுமனே வீடு திரும்புகின்றோம்', 'சிறுநீர் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றால் ஆய்வு கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்படுவது நோயாளர்களே', 'மருந்து விநியோகிக்கப்படவில்லை. மருந்தகங்களில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர்.',
'இவர்கள் கோரிக்கை கோரிக்கை கோரிக்கை என்று கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அதனால் பாதிக்கப்படுவது அரசாங்கமல்ல. நாமல்லவா பாதிக்கப்படுகின்றோம்?' , 'அரசாங்கத்தால் கூட இதனை நிறுத்த முடியாமலுள்ளது. எம்மால் என்ன செய்ய முடியும்?' என்று மக்கள் தொடர்ந்தும் தமது விசனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.
அரச ஒலுசவில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
வைத்தியசாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மருந்துகளை பரிந்துரைக்கின்ற போதிலும், அவை வைத்தியசாலைகளில் விநியோகிக்கப்படுவதில்லை. எனவே அரச ஒசுசலவில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றமையால், அவற்றைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு வரிசையில் காத்திருந்த மக்கள் 'எம்மிடம் அனைத்து மருந்துகளையும் மருந்தகங்களில் கொள்வனவு செய்யுமளவிற்கு பண வசதி கிடையாது. ஏன் இவர்கள் இவ்வாறு எம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றனர்?' என்று விசனம் வெளியிட்டனர்.
ஆனால் எவ்வாறான பாதிப்புக்கள், நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாகவுள்ளன.
அரச தாதிகள் சங்கம்
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும் வரை சுகாதார சேவையை எம்மால் மீள வழங்க முடியாது என்பதை அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பிரதான 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்திருக்கின்றோம் என்று அரச தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் ஓரிரு தினங்களில் அனைத்து தரப்பினரையும் கொழும்பில் ஒன்றிணைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமைக்கு எம்மை தள்ளாது உடன் தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்
சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தால் நாட்டில் குழப்ப நிலைமை ஏற்படும் என்பதால் அரசாங்கம் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஒரு பிண்ணனியில் சுகாதார தொழிற் சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டம் காலத்திற்கு பொறுத்தமற்ற சுயநல செயற்பாடாகும்.
இந்த போராட்டம் தொடர்ந்தும் நீடித்தால் அனைத்து பலம் மிக்க தொழிற்சங்கங்களும் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து நாட்டில் குழப்ப நிலைமை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரச சேவையில் சம்பள முரண்பாட்டினைத் தீர்ப்பதற்காக சம்பள ஆணைக்குழுவின் ஊடாக தேசிய கொள்கையொன்றை, தகுதி மற்றும் தொழில் ரீதியான தகைமையின் அடிப்படையில் உருவாக்குவது அவசியமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, நாட்டில் மேலும் குழப்ப நிலைமை ஏற்பட்டு மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு பிரிவினர் சங்கம்
தமது சேவை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை டெங்கு ஒழிப்பு பிரிவினர் சங்கம் சுகாதார அமைச்சின் வளாகத்தில் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைவிடப்பட்டது.
எதிர்வரும் 21 ஆம் திகதி சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகக் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்த போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment