உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிகுண்டாக வெடிக்கச் செய்தார் உக்ரேனிய இராணுவ வீரர்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3 வது நாளாக இன்று நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள,ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்து பாலத்தை தகர்த்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிரிமியாவிலிருந்து ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க உக்ரைன் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடி குண்டாக வெடிக்கச் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷ்ய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க துணிச்சலாக செய்லபட்டு வீர மரணம் அடைந்துள்ளார் விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்ற உக்ரைன் நாட்டு போர் வீரர்.
ஜெனரல் ஸ்டாப் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரஷ்யாவை தடுப்பதற்கான ஒரே வழி பாலத்தை தகர்ப்பதுதான் என்று முடிவு செய்தது.
ஸ்காகுன் வோலோடிமிரோவிச் தப்பிக்க நேரமில்லை. அவர் தனது தோழர்களிடம் தன்னைத்தானே வெடிக்க வைக்கப் போவதாகக் கூறினார். பின்னர் அவர் வெடிக்கும் சத்தம் கேட்டது.
ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை உக்ரைனின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தின் அருகே ரஷ்ய இராணுவ வீர்ரகளின் மரணத்தை உக்ரைனின் ஆயுதப் படைகள் உறுதி செய்தன.
ஆயுதப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், வோலோடிமிரோவிச் பாலத்தில் வெடி பொருட்களை வைக்க முன்வந்த பிறகு அதை வெடிக்கச் செய்ய முடிவு செய்துள்ளார் "பாலம் துண்டானது. ஆனால் அவர் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை," என்று அவர்கள் விளக்கினர்.
அவரது முயற்சிகள் மற்றும் உக்ரேனிய ஆயுதப் படைகளின் முயற்சிகள் ரஷ்யர்களை பின்தங்க செய்து உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ரஷ்ய துருப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட 'அதிக எதிர்ப்பை' சந்திக்கின்றன என தெரிவித்தார்.
ரஷ்ய நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலை தடுத்து நிறுத்தியது பிரான்ஸ்
இந்நிலையில் ரஷ்ய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஆங்கிலக் கால்வாய் பகுதியில் பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும் சரக்குக் கப்பலையே ஆங்கில கால்வாய் பகுதியில் வைத்து பிரான்ஸ் கடற்படை இடைமறித்துள்ளது.
புதிய ஐரோப்பிய ஒன்றியத் தடைகளுக்கு இணங்க கப்பல் இடைமறிக்கப்பட்டது என்றும், அது வடக்கு துறைமுகமான பவுலோன்-சுர்-மெர்க்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு, தாக்குதல் தொடரும் என்கிறது ரஷ்யா
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார்.
இந்நிலையில், போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் தாக்குதல் தொடரும் எனவும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் நாளுக்குநாள் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
‘கிரெம்பிளின்’ என்று அழைக்கப்படும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை போர் நிறுத்தம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீதான இரண்டாம் நாள் போருக்கு பிறகு சற்றே போர் தணிந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை நிறுத்த உத்தரவிட்டார். உக்ரைனை அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைத்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வர மறுத்ததன் காரணமாக மீண்டும் போரை தொடங்கி விட்டோம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த போரால் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில், கிட்டத்தட்ட 40 இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறினர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற தகவலை ஐ.நா. சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அகதிகளுக்கான ஐ. நா. சபையின் உயர்மட்ட அதிகாரி ஷபியா மண்டோ கூறுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால், கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 16 ஆயிரம் மக்கள் சர்வதேச எல்லைகளை கடந்துள்ளனர்.
ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மணி நேரமும் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது” என்று தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அன்று மட்டும் ரஷ்ய படையெடுப்பு காரணமாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரஷ்ய தாக்குதல் எதிரொலியாக உக்ரைன் நாட்டு குடிமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு தப்பித்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த போரால் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில், கிட்டத்தட்ட 40 இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
அகதிகளாக வெளியேறுபவர்கள் அண்டை நாடுகளான போலாந்து, மோல்டோவா, ஹங்கேரி, ரோமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.
உக்ரைனை விட்டு வெளியேறுபவர்களில் எத்தனை பேர் எந்தெந்த நாடுகளில் தஞ்சம் சேருகின்றனர் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், அதிகபட்சமாக போலாந்தில் அதிகமானோர் நுழைந்துள்ளனர்.
முன்னதாக, 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உக்ரைனிய ஆக்கிரமிப்பால், அப்போதைய காலகட்டத்திலிருந்தே போலாந்து நாட்டில் 20 இலட்சம் உக்ரைனியர்கள் நிரந்தரமாக வசித்து வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், அவர்கள் போலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலாந்து - உக்ரைன் எல்லையை கடந்துள்ளனர் என்ற தகவலை போலாந்து அரசு தெரிவித்துள்ளது.
போலாந்து நாட்டுக்குள் நுழைவதற்காக, இருநாட்டு எல்லையில் உள்ள மேடைகா எல்லை பகுதியில், 15 கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment