சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் முதலாம் திகதியுடன் நிறைவு : வேலை நிறுத்தப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் முதலாம் திகதியுடன் நிறைவு : வேலை நிறுத்தப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினை எதிர்வரும் புதன்கிழமை முதல் (மார்ச் 2 ஆம் திகதி முதல்) மீண்டும் முன்னெடுப்பதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

14 நாட்களுக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஏற்கனவே தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

அதற்கமைய மார்ச் முதலாம் திகதியுடன் அவர்களால் கூறப்பட்ட 14 நாட்கள் நிறைவடையவுள்ள போதிலும், இதுவரையில் தமக்கான எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு, கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்தாமை, ரணு சம்பள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், மேலதிக கொடுப்பனவுகள், தொழில் தகைமைகளுக்கு ஏற்ப சம்பளத்தை வழங்குதல், அனைத்து சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கிய 'சுகாதார நிர்வாக சேவையை' நிறுவுதல் , விசேட சேவை கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்குதல், சுகாதார சேவையை நிரந்தர சேவையாக்குதல் உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் கடந்த 7 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

எவ்வாறிருப்பினும் அரச தாதியர் சங்கத்தினரின் போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை மற்றும் சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தை என்பவற்றால் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

எவ்வாறிருப்பினும் போராட்டம் கைவிடப்பட்டதன் பின்னர் அமைச்சின் தரப்பிலிருந்தோ அல்லது ஜனாதிபதியிடமிருந்தோ எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையிலேயே மீண்டும் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது எம்மால் வழங்கப்பட்ட 14 நாட்கள் கால அவகாசம் மார்ச் முதலாம் திகதியுடன் நிறைவடைகிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இது தொடர்பான கடிதமொன்றையும் சுகாதார அமைச்சருக்கு கடந்த 21 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளோம்.

சுகாதார அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளோம். எனினும் இரு தரப்பிலிருந்தும் எவ்வித பதில்களும் கிடைக்கப் பெறவில்லை.

எனவே மார்ச் 2 ஆம் திகதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். எந்தவொரு நடவடிக்கையின் மூலமும் எமது போராட்டத்தினை முடக்க முடியாது. சில தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் நாம் சம்பள முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகக் கூறுகின்றனர்.

சம்பள கொள்கைளில் புதிதாக முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு எவ்வித தேவையும் கிடையாது. காரணம் தற்போது பின்பற்றப்படுகின்ற சம்பள முறைமை முழுமையாக தேசிய சம்பள கொள்கைக்கு முரணானதாகும்.

எந்தவொரு அரச துறையினரதும் சம்பள அதிகரிப்பிற்கு நாம் முரணானவர்கள் அல்ல. ஆனால் சம்பள அதிகரிப்பானது அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அன்றி, தேசிய சம்பள கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment