(இராஜதுரை ஹஷான்)
மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பட்டதாக காணப்படுகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. மின் விநியோகம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடும் கருத்து முரண்பட்டதாக காணப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய தில்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டது.மின் விநியோகத்தை துண்டிப்பது அவசியமற்றது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்ட மறுதினத்திலிருந்து நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு சில உறுப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் தேவையற்ற பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஆளும் தரப்பின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே ஒரு சில குறைப்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுகிறோம்.
கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வழங்கிய ஒத்துழைப்பு நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்துள்ளது. அனைத்து சவால்களையும் அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும் என்றார்.
No comments:
Post a Comment