ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக நிறுவனங்கள் இணைந்து கூட்டுப் பொறுப்போடு செயற்பட்டால் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும் என மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டக் கல்விப் பிரிவிலுள்ள டாக்டர் அஹமட் பரீட் வித்தியாலய அதிபர் எம்.பி.எம்.ஏ. சக்கூர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை 11.02.2022 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
இந்தப் பாடசாலைக்கு சதகா சமூகசேவை நிறுவனத்தினால் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம் அந்நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அபுல்ஹஸன் மற்றும் செயலாளரும் கிராம அலுவலருமான எம்.எம்.ஏ. ஷாபி ஆகியோரடங்கிய நிறுவனப் பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர் சக்கூர், பாடசாலை மாணவர்களை கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்லாது ஒழுக்க விழுமியங்களிலும் சமூக செயற்பாடுகளிலும் புறக்கிருத்திய விடயங்களிலும் சிறந்தோங்கச் செய்யும் அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
எதிர்காலத் தலைவர்களான எமது இன்றைய சிறார்களை வீட்டுக்கும் நாட்டுக்கும் சிறந்த தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பைiயும் கடமையையும் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் சுமந்திருக்கின்றோம்.
அதனோடு இணைந்து செயற்படுகின்ற பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் சமூக நிறுவனங்களுக்கும் உள்ள இத்தகைய பொறுப்புக்களை தனியே அதிபரோ அல்லது ஆசிரியர்களோ அல்லது ஒரு சாரார் மாத்திரமோ சுமக்க முடியாது.
ஆர்வமும் அக்கறையுமுள்ள யாவரும் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து செயற்படுகின்றபோது எதிர் காலத்தில் சிறந்த கற்றறிவான சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்.
இந்நிகழ்வில் கோட்டக் கல்வி வலயத்தின் உடற்கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் நஸீர் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெற்றோர் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment