எமது நாட்டை மீட்டெடுப்பதற்கான சக்தி இளைஞர்களிடம் மாத்திரமே உள்ளது : ஐக்கிய ஒற்றுமைப் படையணியை நிறுவியது பிரதான எதிர்க்கட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

எமது நாட்டை மீட்டெடுப்பதற்கான சக்தி இளைஞர்களிடம் மாத்திரமே உள்ளது : ஐக்கிய ஒற்றுமைப் படையணியை நிறுவியது பிரதான எதிர்க்கட்சி

(நா.தனுஜா)

அண்மைய காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற எமது நாட்டை மீட்டெடுப்பதற்கான சக்தி இளைஞர்களிடம் மாத்திரமே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எனவே நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை ஒன்றுதிரட்டிக் கொள்ளும் நோக்கில் தமது கட்சியின் ஊடாக ஐக்கிய ஒற்றுமைப் படையணியை நிறுவியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் நிறுவப்பட்டுள்ள ஐக்கிய ஒற்றுமைப் படையணியின் அலுவலகத்தை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனைத் தொடர்ந்து எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொரேனா வைரஸ் பரவல் காரணமாகவும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் இப்போது எமது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, அதனை மீளக்கட்டியெழுப்புவதற்கான இயலுமை இளைஞர்களிடம் மாத்திரமே காணப்படுகின்றது.

எனவே நாட்டின் மீட்சியை இலக்காகக் கொண்டு இளைஞர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நோக்கில் எமது கட்சியின் ஊடாக ஐக்கிய ஒற்றுமைப் படையணி என்ற கட்டமைப்பை நிறுவியிருக்கின்றோம்.

அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் செயலாளராக சமிந்த விஜேசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இளைஞர்களை ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்லும் பயணம் நாளையதினம் (இன்று) இரத்தினபுரியில் ஆரம்பமாகவிருப்பதுடன் நாளை மறுதினம் (நாளை) பதுளையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனூடாக இளைஞர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் அதேவேளை, தன்னலமற்றதும் சுதந்திரமானதுமான இளைஞர் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே தற்போதைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க விரும்பும் இளைஞர்கள் இரத்தினபுரியிலும் பதுளையிலும் ஐக்கிய ஒற்றுமைப் படையணியினால் முன்னெடுக்கப்படவிருக்கும் கூட்டங்களில் எவ்வித இன, மத, கட்சிபேதங்களுமின்றி ஒன்றுதிரளவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

No comments:

Post a Comment