அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கமாட்டோம் : சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கமாட்டோம் : சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் - மஹிந்த அமரவீர

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் தீர்மானங்களை ஒருபோதும் முன்னெடுக்கமாட்டோம். அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானால் அதன் விளைவை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இனிவரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை நிச்சயம் கைப்பற்றும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சுதந்திர கட்சி அரசியல் வரலாற்றில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளது என்பதை அரச தலைவர்கள் நன்கு அறிவார்கள்.

சுதந்திர கட்சியை மறுசீரமைப்பது பிரதான நோக்கமாக காணப்படுகிறது. மாவட்ட மட்டத்தில் தொகுதி அமைப்பாளர் கூட்டங்கள் இடம் பெற்ற நிலையில் உள்ளன.

எதிர்வரும் நாட்களில் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி பிரதான பங்காளி கட்சியாக உள்ளது.

அரசாங்கத்திற்கும், சுதந்திர கட்சிக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் களத்தில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுக்கமாட்டோம். அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானால் அதன் விளைவு நாட்டு மக்கள் மீது தாக்கம் செலுத்தும்.

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள எத்தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என்றார்.

No comments:

Post a Comment