(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர நேற்று (14) அப்பதவியிலிருந்து விடை பெற்றுச் சென்றுள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதியின் செயலர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே நேற்று அவர் விடை பெற்றுக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பில் நேற்று (14) ஜனாதிபதி செயலகத்தில், மிக எளிமையான வைபவம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ள நிலையில், அவர்கள் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவுக்கு தமது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் இதன்போது தெரிவித்ததாக அறிய முடிகிறது.
இந்நிலையில் எதிர்வரும் வாரம் பிரதமரின் செயலர் காமினி செனரத் புதிய ஜனாதிபதி செயலராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2021 டிசம்பர் மாதம் ஆரம்ப பகுதியில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னிலையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், அவரே நாட்டின் விவசாய, பசளை, பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணம் என தெரிவித்து பதவி விலக்க கோரியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தை கடந்த 2021 டிசம்பர் இறுதி வாரத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததுடன் அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment