இலங்கை மத்திய வங்கி கீழ் மட்ட அரசியல் நோக்கில் சிந்திப்பதை விடுத்து, பொருளியல் ரீதியில் சிந்திக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

இலங்கை மத்திய வங்கி கீழ் மட்ட அரசியல் நோக்கில் சிந்திப்பதை விடுத்து, பொருளியல் ரீதியில் சிந்திக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் முதற்தடவையாகக் கடந்த டிசம்பர் மாதம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வேண்டுமெனின் மத்திய வங்கி கீழ் மட்ட அரசியல் நோக்கில் சிந்திப்பதை விடுத்து, பொருளியல் ரீதியில் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பு பணவீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, கடந்த நவம்பர் மாதம் 17.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 22.1 சதவீதமாக அதிகரித்ததாகவும் நவம்பரில் 6.4 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப் பணவீக்கம் டிசம்பரில் 7.5 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விலைக் கட்டுப்பாடுகளுடன் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 200 ரூபா என்ற மட்டத்தில் பேணப்பட்ட போதிலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் முதற்தடவையாக கடந்த டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளது. அதுமாத்திரமன்றி உணவுப் பணவீக்கம் 22.1 சதவீதமாகப் பதிவாகியுள்ள நிலையில், இது மிகவும் உயர்வானதாகும்.

இந்த நெருக்கடி நிலைமை உடனடியாக சீர் செய்யப்படா விட்டால், பணவீக்கமானது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அதிகரிக்கும் என்று அவர் டுவிட்டர் பதிவின் ஊடாக எச்சரித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி வட்டி வீதங்கள் தற்போது மிகவும் எதிர்மறையான மட்டத்தில் காணப்படுகின்றமை குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் ஹர்ஷ டி சில்வா, இதனூடாக வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிக்குத் தீர்வுகாண முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமெனின், மத்திய வங்கி கீழ் மட்ட அரசியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பதை விடுத்து பொருளியல் ரீதியில் சிந்திக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவின் ஊடாக வலியுறுத்தியிருக்கின்றார்.

மேலும் 'வட்டி வீதங்கள் அதிகரிக்கும்போது பணத்திற்கான கேள்வி வீழ்ச்சியடையும் என்ற கோட்பாடொன்று உள்ளது. இருப்பினும் நான் அந்தக் கோட்பாட்டை நம்பவில்லை' என்று அண்மையில் சிங்கள நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர் சமந்த குமாரசிங்க தெரிவித்திருந்தார்.

அக்கருத்தை மேற்கோள்காட்டி மற்றுமொரு டுவிட்டர் பதிவைச் செய்திருக்கும் ஹர்ஷ டி சில்வா, 'மிகவும் திறமையான வங்கி நிர்வாகியான நிஹால் பொன்சேகாவை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமந்த குமாரசிங்க நியமிக்கப்பட்டார்' என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அத்தோடு அவரது நேர்காணலை முழுமையாக வாசிப்பதன் ஊடாக மத்திய வங்கிக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment