(என்.வீ.ஏ.)
சிம்பாப்வேக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், சரித் அசலன்க ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி குவித்த அரைச் சதங்கள் இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது.
கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இப் போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பை தோற்றுவிப்பதாக அமைந்தது.
சிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைக் குவித்து 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
குசல் மெண்டிஸ் (26), கமிந்து மெண்டிஸ் (17) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பன்னர் பெத்தும் நிஸ்ஸன்க (75), தினேஷ் சந்திமால் (75) ஆகிய இருவரும் 3 ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து தினேஷ் சந்திமாலுடன் இணைந்த சரித் அசலன்க 71 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 ஆவது விக்கெட்டில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுபடுத்தினார்.
சிம்பாப்வே பந்துவீச்சில் றிச்சர்ட் நிகாரவா 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய சிம்பாப்வே 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களைக் குவித்தது.
ரெஜிஸ் சக்கப்வா (72), டக்குட்ஸ்வன்ஷே கய்ட்டானோ (42) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான 35 வயதுடைய சோன் வில்லியம்ஸ் அபாரமாக துடுப்பெடுத்தாடி 87 பந்துகளை எதிர்கொண்டு 9 பவண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக சரியாக 100 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 5ஆவது ஒருநாள் சதமாகும்.
சக்கப்வா, சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டர்சே 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் ப்ரதீப் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் தினெஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி செவ்வாய்க்கிழமை (18) பல்லேகலையில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment