நல்லாட்சி அரசின் இழுத்தடிப்பே தொலைக்காட்சி சேவையை டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான காலத்தை சீரழித்ததென ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் சிற்றன்னை கவனிப்பே இத்திட்டம் 2025 வரை செல்வதற்கு காரணமாகவுள்ளது. இல்லாவிட்டால் இவ்வருட டிசம்பரிலேயே இத்திட்டத்தை நிறைவு செய்திருக்க முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜப்பானியத் தூதுவர், அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
தொலைக்காட்சி சேவையை டிஜிட்டல் மயப்படுத்தல் திட்டத்தை எனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளக் கிடைத்தமை பெரும் வெற்றியாகும்.
எமது நாட்டின் தொலைக்காட்சி சேவை நன்கொடையாக வழங்கிய ஜப்பான் அரசாங்கம் தற்போது இந்தத் செயற்திட்டத்துக்கு அனுசரணை வழங்குகின்றமை பாராட்டத்தக்கது.
ஜப்பான் அரசாங்கம் எல்லாக் காலத்திலும் எமது நாட்டுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளது. அன்று தெற்காசியாவின் சிறந்த முன்னேற்றமாக தொலைக்காட்சி சேவை எமக்குகே கிடைத்தது. எமது அயல் நாடான இந்தியாவுக்கு வர்ணத் தொலைக்காட்சி கிடைக்காத காலத்திலேயே அது எமக்கு கிடைத்தது.
எமது நாட்டின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பில் டிஜிட்டல் முறையைக் கொண்டு வருவதற்கு தொழில் நுட்பரீதியான ஆரம்பகட்ட நடவடிக்கைகள், பல வருடங்களுக்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் கடந்த அரசு அதனை மேற்குலக நாடொன்றுக்கு வழங்க வேண்டுமென்று வேலைத் திட்டத்தை இழுத்தடித்தது. எனினும் அன்று ஊடக அமைச்சராக இருந்த மக்கள சமரவீர அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
குறித்த காலத்தில் இத்திட்டத்தை ஆரம்பித்திருந்தால் இவ்வருடம் டிசம்பர் 21ஆம் திகதி அதனை நிறைவு செய்திருக்க முடியும். கடந்த அரசாங்கமே இதன் பின்னடைவுக்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும் 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் தெளிவான தொலைக்காட்சி ஒளிபரப்பை நாட்டு மக்கள் கண்டுகளிக்க முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment