நல்லாட்சி காலத்தில் ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரியரகளை நிரந்தரமாக்குவது தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்று முன்தினம் (28) ஹற்றனில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நியமனங்கள் வழங்குவது, தாமதப்படுவது குறித்து நாங்கள் கவலையடைகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நியமனத்தை தள்ளிவைத்து அதில் நாங்கள் அரசியல் செய்ய முற்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
நியமனங்களை வழங்குவதன் மூலம்தான் அரசியல் செய்ய முடியுமே தவிர நியமனங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் எவ்வாறு அரசியல் லாபம் தேட முடியும் என்று வேலுகுமாருக்கு தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
முன்னாள் அமைச்சர் இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த போது இந்த நியமனங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் கூட அதை வழங்காமல் விட்டுவிட்டு தற்போது நாங்கள் நியமனங்களை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை விமர்சிப்பது வேதனையாக இருக்கின்றது.
நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை எங்களது அழுத்தத்தினால் மத்திய மாகாண கல்வி அதிகாரிகள் செய்திருந்த போதும் தற்போது அவர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அனுமதியை பெறுவதற்கு காத்திருப்பதாக எமக்கு தெரிவிக்கிறார்கள் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஹற்றன் விசேட நிருபர்
No comments:
Post a Comment