மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு விகாரையில் யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் யானை வெடி வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விகாரையின் விகாராதிபதியை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு - கல்மடு மலையடிவாரம் பகுதியில் மதுபோதையில் அங்கு சென்ற ஏழு இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விகாராதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது விகாராதிபதி யானை வெடியை கொழுத்தி அதனை ஒரு இளைஞனின் வயிற்றில் வைத்து கட்டிப்பிடித்ததில் வெடி வெடித்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் தேரர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிபதி ஈ.எல். சஹாப்தீன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரரை பொலிசார் கைது செய்து சிறைச்சாலை அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கேசரி
No comments:
Post a Comment