எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதமல்ல. மாறாக, இன்னுமொரு இனத்துக்கு கிடைக்க விருக்கின்ற நியாயமான உரிமையை கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணிப்பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம்பெற்றுள்ளது. ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளிய விடயம்.
வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றி இருக்கலாம். அது ஆயுதக் கலாசாரத்தில் இடம்பெற்றது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது வேறு.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அதிகாரங்களிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் முஸ்லிம் ஒருவர் இல்லாமல் போனமை. இம்முறை மாத்திரம்தான் அப்படியிருந்த போதும், கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படிப்பறிபோனது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனைப் பேச வேண்டிய தேவையுள்ளது. ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து பாராளுமன்றத்தில் பேசுகிறார்.
முஸ்லிம்களுக்கு நாட்டிலும் மட்டக்களப்பிலும் காணிப் பிரச்சினையில்லை. முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணியில்லையென்று நாடகமாடுகிறார்கள் எனக்கூறுகிறார்.
சாணக்கியன் (எம்பி) காணியில்லையென்று சொன்னது பிரச்சினையில்லை. அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்திலிருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள்? அதுதான் எனக்கு கவலை தருகின்றது எனத் தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, வெளிநாட்டைமைச்சின் சார்க் நாடுகளுக்கான பணிப்பாளர் என்.எம். முஹம்மட் அனஸ், கல்வி அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, 2020ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சையில் மருத்துவ, பொருளியல்பீடம், சட்டக் கல்லூரிகளுக்குத் தெரிவான 35 மாணவர்களும், 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி பெற்ற 24 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை கல்வி அபிவிருத்தி அமைப்பான சீடா அமைப்பினரால் வழங்கப்பட்ட போட்டோப்பிரதி இயந்திரம் மற்றும் உயர் தர விஞ்ஞானப் பிரிவுக்கு பொது வைத்திய நிபுணர் டாக்டர் பரீட் அன்பளிப்புச் செய்த புத்தகங்களும் பாடசாலை நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலை நிருவாகம் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி.நியாஸ் ஆகியோரால் பிரதம அதிதி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment