எம்.எம்.சில்வெஸ்டர்
லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவை தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி நிர்வாகம் அவரை வாங்கியுள்ளது.
ஆரம்பத்தில் கழக மட்ட கிரிக்கெட் விளையாடும் எண்ணம் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்த ரோஹித்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியன்று 2021/2022 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்கேற்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் களுத்துறை நகர அணிக்காக பங்கேற்றிருந்தார்.
தனது 32 ஆவது வயதில் முதற்தர கிரிக்கெட்டில் கால்பதித்த இவர், தான் விளையாடிய முதல் போட்டியில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்தார்.
இதுவரை 3 போட்டிகளில் வெறுமனே 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள ரோஹித்த ராஜபக்ஷ லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
லண்டனில் வசிக்கும் தொழிலதிபரான காமர் கான் உரிமைாயாளராகவுள்ள தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணிக்கு இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவரான தசுன் ஷானக்க அணித்தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment