(எம்.ஆர்.எம்.வசீம்)
பால்மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் ஒரு கோப்பை 80 ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்ய முடியாது. அதனால் நுகர்வோருடன் முரண்படுவதை தவிர்த்துக் கொள்வதற்காக சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில்லை என தீர்மானித்திருக்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் பால்மா 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுகின்றது.
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் ஒரு கிலோ கிராம் பால்மா 1345 ரூபாவுக்கு விற்பனையாகின்றது. அதேபோல் 400 கிராம் பால்மா பெக்கெட் ஒன்று 540 ரூபாவுக்கு விற்னையாகின்றது. பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றபோதும் அரசாங்கம் அது தொடர்பில் மெளனம் காத்துவருகின்றது.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கையாளும் புதிய திட்டம்தான், ஆரம்பமாக குறித்த பொருளுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை அதற்காக வரிசையில் காக்க வைப்பதாகும். பின்னர் மக்களின் நிலைமையை அறிந்துகொண்டு விலையை அதிகரித்து குறித்த பொருளை சந்தைக்கு விநியோகிப்பதாகும். இதுதான் அரசாங்கத்தின் சௌபாக்கிய வேலைத்திட்டம்.
சாதாரண மக்கள் வீடுகளுக்கு கொண்டுசெல்வது 400 கிராம் பால்மா பெக்கெட்டுகளாகும். ஆனால் இன்று 400 கிராம் பால்மா வாங்குவதற்கு 2 அரை டொலர் தேவைப்படுகின்றது.
மேலும் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பால்மா விலையானது மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத சுமையாகும். சிற்றுண்டிச்சாலைகளில் இதுவரை 60 ரூபாவுக்கு விற்பனை செய்துவந்த பால் தேநீர் ஒரு கோப்பை தற்போது 80 ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்ய முடியாது.
ஏனெனில் கொவிட் சுகாதார சட்டத்துக்கமைய சிற்றுச்சாலைகளில் தற்போது தேநீர் பிளாஸ்டிக் கோப்பையிலே வழங்கப்படுகின்றது. அது ஒருமுறை பயன்படுத்திய பின்னர் எறியப்படும். ஆரம்பத்தில் அந்த கோப்பை ஒன்று 2, 3 ரூபாவுக்கே விற்பனையாகி வந்தது. தற்போது 6, 7 ரூபாவாகின்றது. இந்த செலவுடன் பார்க்கையில் 80 ரூபாவுக்கு குறைய பால் தேநீர் விற்பனை செய்யமுடியாது.
அதனால் சிற்றுச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். யாருக்காவது பால் தேநீர் தேவை என்றிருந்தால், விலையை குறிப்பிட்டு பால் தேநீர் தயாரித்து வழங்குவதற்கு சிற்றுண்டிச்சாலைகளுக்கு முடியும்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அதாவது 2019 நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஒரு கோப்பை பால் தேநீர் 30, 40 ரூபாவுக்கே விற்பனையாகி வந்தது. தற்போது 80 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் நிலைமையாகும் என்றார்.
No comments:
Post a Comment