நிபந்தனையின் அடிப்படையிலேயே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை வழங்குகிறோம் - ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 21, 2021

நிபந்தனையின் அடிப்படையிலேயே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை வழங்குகிறோம் - ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்திலான உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே குறித்த தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாட்டில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் யாருடைய தவறின் காரணமாக சீன உரக் கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி ஏற்பட்டது? என்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்துகையில், நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இரு தரப்பினரதும் நிலைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தரத்திற்கு ஏற்ப மீண்டும் உரத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

குறித்த உர நிறுவனத்தினால் ஏற்கனவே 5 மில்லியன் டொலர் பிணைமுறி வைப்பிடப்பட்டுள்ளது. அந்த பிணைமுறி விடுவிக்கப்படவில்லை.

இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்துடனான உரம் வழங்கப்பட்ட பின்னரே அந்த தொகை விடுவிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே எதிர்காலத்தில் உரிய தரத்துடனான உரம் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதுவரையில் உர நிறுவனத்தினால் வைப்பிடப்பட்ட 5 மில்லியன் டொலர் வைப்பிலிருக்கும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment