(ஆர்.யசி)
நாட்டின் டொலர் பற்றாக்குறை காரணமாகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய தீர்மானத்தை எடுக்க நேர்ந்தது. எனினும் ஜனவரி 23 ஆம் திகதி கச்சாய் எண்ணெயுடன் சர்வதேச கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ள காரணத்தினால் ஜனவரி 26 ஆம் அல்லது 27 ஆம் திகதியளவில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க முடியும் என நம்புவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அவ்வப்போது மூட நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடே காரணமாகும். அரசாங்கத்திடம் டொலர்கள் இருக்கும் என்றால் எந்தவித தடையும் இல்லாது எமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
அதேபோல் கடன் மீள செலுத்துகளை ஆளுமை இல்லை என எம்மை தரப்படுத்தலில் கீழ் தள்ளியுள்ளமையும் மேலும் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு தேவையான கச்சாய் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் வேளையில் ஒரு கப்பலுக்கு 60 பில்லியன் டொலர்கள் செலவாகின்றது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதியின் போது 25 தொடக்கம் 30 பில்லியன் டொலர்களுக்குள் மட்டுப்படுத்திவிட முடியும்.
இன்றுள்ள நிலையில் நாணயக் கடிதம் ஒன்றினை திறந்து அவ்வளவு நிதியை வைப்பிலிட முடியாதுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.
எமது கடன்கள் அதிகரிக்கும் வேளையில் வேறு எவரும் எமக்கு கடன்களை வழங்க விரும்புவதும் இல்லை. இதுவே இன்று எமக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஜனவரி மாதம் 23ஆம் அல்லது 24 ஆம் திகதிகளில் கச்சாய் எண்ணெய் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளது. அந்த கப்பலில் உள்ள எண்ணெய் இறக்கப்பட்டவுடன் 26ஆம் அல்லது 27 ஆம் திகதிகளில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment