புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்ச வயதெல்லை அடுத்த வருடம் 21 இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் (NATA) தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்ஷ நேற்று உறுதிபடுத்தியுள்ளார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை சட்டத்தை 2022 ஆம் ஆண்டு திருத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், குறித்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சட்டத்தின்படி, புகையிலை விளம்பரம், மற்றும் அனுசாரணைகள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின் கீழ் புகையிலை பொருட்கள் தொடர்பாக எல்லை தாண்டிய விளம்பரங்களை தடை செய்வோம் என நம்புகிறோம்.
மேலும் சமூக ஊடகங்கள் உட்பட இணையத்தில் பரவி வரும் புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் நீக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2006 இல் நிறைவேற்றப்பட்ட புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டம் இலங்கையில் புகையிலை கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் சட்டமாகும்.
விரிவான சட்டத்தில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளும் அடங்கும்.
No comments:
Post a Comment