“இந்தியாவிற்கு ஆற்றிய சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்'' என்ற காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு, கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாளன்று அவர் ஞாபகார்த்தமாக இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட 3 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவ்வாரம் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீர மரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றையதினம் இவ்வாரத்தினுள் அதி விசேட தினம்.
இத்தருணத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய சுபாஷ் சந்திர போஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.
“நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றன. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால் தோல்வியுற்றார். ஆனால் யார்தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?” இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்''
அஹிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு, கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment