(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் இலங்கையினை ஈடுபடுத்துவதற்கான முயற்சியே அனைத்து சவால்களுக்கும் முன்னணியில் காணப்படுவதாகவும், எமது நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களே இத்துயரத்தின் முக்கிய இலக்காகும் எனவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது நிதி அமைச்சர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் இலங்கையினை ஈடுபடுத்துவதற்கான முயற்சியே அனைத்து சவால்களுக்கும் முன்னணியில் காணப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். எமது நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களே இத்துயரத்தின் முக்கிய இலக்காகும்.
ஜனாதிபதி, முற்படைகள் மற்றும் பொலிஸ் உள்ளடங்களாக ஒட்டு மொத்த அரச இயந்திரமும் சர்வதேச போதைப் பொருள் மாவியாவுக்கெதிராக துணிச்சலாக போராடி வருகின்றது. அதற்காக நாம் அவர்களுக்கு நன்றிகூற வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான போராட்டத்தில் அண்மைக் காலங்களில் தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொண்டவாறு இலங்கை சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றுமொரு தீவிர பிரச்சினை சட்டத்திற்குப் புறம்பான இலாபங்களை நாடுகின்ற தனிப்பட்டவர்களினதும் நிறுவனங்களினதும் மோசடியான வியாபார நடவடிக்கைகளுக்கூடாக இந்நாட்டு மக்களின் வாழ்க்கை மீதான தாக்கமாகும்.
விசேடமாக பொருட்களைப் பதுக்கல் செயற்கையான பொருட் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தல், உயர் விலைகள் ஊடாக கறுப்புச் சந்தையினை தோற்றுவித்தல் என்பன காலத்திற்குக் காலம் இந்நாட்டு மக்களினால் முகங்கொடுக்கப்படுகின்ற துயரங்களாகும். அத்தகைய நியாயமற்ற வர்த்தகர்களுக்கெதிரான எமது போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், மக்கள் சார்பில் உபாயமுறைகள் பின்னடைவுக்குட்பட்டமை உண்மையாயினும், இதனை பலவீனமொன்றாகக் காணவேண்டாமென உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கு நிரந்தர தீர்வொன்றினை உருவாக்குவதற்கு மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்துவதினூடாக சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகளுடன் இணைந்து தனியார் துறையினைப் போன்று போட்டிச் சந்தையில் நிறுவனத்துறையின் ஏகபோகத்தினை மாற்றியமைத்து சுதந்திரமான சந்தை நிலைமையொன்றினை உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment